சுதந்திர தினம் (15/08/2025) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகள் இயக்கபட உள்ளன. அதே போன்று 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.