இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (14-10-25) சட்டசபையில் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இன்று (13-10-25) சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், நாளை (14-10-25) முதல் 4 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் முடிவின்படி நாளை முதல் வரும் 17ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெறலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை சட்டமன்ற கூட்ட தொடரானது, காலை 9:30க்கு மணிக்கு கூடி, மறைந்த முன்னாள் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக, கரூரில் நடைபெற்ற துயர சம்பவம், முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உட்பட அனைவருக்கும் சட்டமன்றத்திலே இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதனை தொடர்ந்து, டிகே அமுல் கந்தசாமி சட்டமன்ற உறுப்பினருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சிகள் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, அடுத்த அடுத்த நாள் 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து, மறுநாள் விவாதம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.