source says CBI decide send summons Vijay for Karur stampede case
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், காவல் துறையினர்
மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் (29-12-25) ஆஜராகி விளக்கமளித்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் அனைவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம் என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த தமிழ்நாடு அரசு அதிகாரிகள், கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி (Walkie - talkie) மூலமாக தவெக
நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மட்டுமே அரசு தரப்பில் எடுக்கப்பட்டதாகவும்
விளக்கமளித்தனர். தவெக மூத்த நிர்வாகிகளிடமும், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்பி இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பல மணி நேரம் விசாரணை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஜனவரி மாதம் சம்மன் அனுப்ப சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், மூன்றாவது நாளாக இன்று (31-12-25) தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
Follow Us