சென்னை குரோம்பேட்டைக்கு அருகே உள்ள கணபதிபுரம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவலிங்கம். 76 வயதான இவர்.. தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 41 வயதான மகன் நிரோஷன், பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, மகளுக்கு திருமணமாகி பெங்களூரில் செட்டிலான நிலையில்.. நிரோஷனுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.
பெங்களுருவில் பணியாற்றும் நிரோஷன், அவ்வப்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருக்கும், தந்தை சிவலிங்கத்திற்கும் கடந்த 8 ஆண்டுகளாக சரியான பேச்சுவார்த்தை இல்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரம், தனக்கு திருமணம் ஆகாததால் நிரோஷன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், நிரோஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஊருக்குள் வரன் பார்த்து வந்துள்ளனர். இதன் நீட்சியாக, ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்து, விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், நிரோஷனை திருமணம் செய்துகொள்ள இருந்த அந்த பெண், தன் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, தந்தை சிவலிங்கம் இதை சுட்டிக்காட்டி மகனை மோசமாக திட்டியுள்ளார். இதனிடையே, தந்தை திட்டியது, நிரோஷன் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதியன்று நிரோஷன் பெங்களூருவில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அன்று காலையில் அவரது தாயிடம், ''கீழே கொரியர் வந்துள்ளது. போய் வாங்கி வாருங்கள்'' என்று நிரோஷன் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது தாயாரும் வீட்டின் கீழே சென்றபோது.. அங்கு எந்த கொரியரும் வரவில்லை. பின்னர், மீண்டும் வீட்டிற்கு அவர் வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அப்போது, நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் அவர் வெளியே காத்திருந்துள்ளார்.
இந்த சூழலில், மகன் நிரோஷன் சிறிது நேரம் கழித்து வீட்டின் கதவை திறந்துள்ளது.அப்போது, அவருடைய தாய் உள்ளே சென்றபோது.. வீட்டின் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே நிரோஷன் தான் அவரை கொலை செய்தார் என தெரிந்துகொண்டு.. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சிவலிங்கத்தின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் அழுது கொண்டிருந்த நிரோஷனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்கான காரணம் அம்பலமாகியுள்ளது.
"சிறு வயது முதலே தந்தை சிவலிங்கம் திட்டிக்கொண்டே இருந்ததால் நிரோஷனுக்கு அவர் மீது எப்போதும் கோபம் இருந்து வந்துள்ளது. இதன் நீட்சியாக ஏற்பட்ட தகராறில் தான்.. நிரோஷன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை சிவலிங்கத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதையடுத்து, நிரோஷன் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.