கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 51), தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், இவருக்கு வாலிப வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களது வீட்டில் மணிகண்டனின் மாமியார் (வயது 75) வசித்து வந்தார். அவர், மருமகன் மற்றும் பேரனுக்கு உணவு சமைத்து வழங்கி வந்தார். மேலும், மகள் இறந்துவிட்ட நிலையில், மருமகன் மணிகண்டனை மகனாகக் கருதி, அவருக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மதுபழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன், நேற்று (ஜூலை 16, 2025) இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் அனைவரும் அவரவர் அறைகளில் தூங்கச் சென்றனர். நள்ளிரவில், போதையில் இருந்த மணிகண்டன், மாமியாரின் அறைக்கு சென்று, 75 வயது முதியவர் என்று பாராமல், அவரிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பேரன், பாட்டியின் கூச்சலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்து, மூதாட்டியின் அறைக்கு வந்துள்ளார். நிலைமையை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர், ஆத்திரத்தில் தனது தந்தையை சரமாரியாகத் தாக்கினார். இதில் மணிகண்டன் காயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து, கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாமியாரை வன்கொடுமை செய்ய முயன்ற மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குடிபோதையில் மாமியாரை வன்கொடுமை செய்ய முயன்ற மருமகனின் செயல், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது