தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

அதாவது, எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர்களாக உள்ளவர்களிடம் இருந்து பெற்ற எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்பி அதை பதிவேற்றம் செய்யும் பணியும் நடந்து வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெளியானது.

Advertisment

இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் முகாம் நடத்ததப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

archana-patnaik-ias

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய உச்சநீதிமன்றத்தால், பல்வேறு வழக்குகளில் 29.01.2026 அன்று வழங்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில், இந்தியத் தேர்தல் ஆணையமானது. 30.01.2026 அன்று வெளியிட்ட "முரண்பாடுகள்" (Logical Discrepancies) என்ற பிரிவில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர் பட்டியலை கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் தாலுக்கா/ துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

Advertisment

மேலும், இம்முரண்பாடுகள் பிரிவில் பாதிக்கப்படக்கூடிய நபர்கள், முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள், உரிய விளக்கத்துடன் தங்களது ஆவணங்களை அல்லது மறுப்புரைகளை நேரில் அல்லது தங்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி (வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட) மூலமாக சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது. இதற்கமைவாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முரண்பாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் தொடர்புடைய நபர்கள் தங்களது ஆவணங்களை அல்லது மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது. 01.01.2026ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.