மேற்குவங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகளை விரைந்து முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, அனைத்து பணியாளர்களும் மும்மரமாக இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, இந்த எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். 

Advertisment

அதாவது,  தேவையற்ற காரணங்களால் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், உயிருடன் இருப்பவர்களை இறந்ததாகக் கூறி அவர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, முதல்வர் மம்தா இவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களில் சிலரை டெல்லிக்கு அழைத்துச் சென்று, தேர்தல் ஆணையத்தின் முன் நிறுத்தினார். இவர்கள் உயிருடன் இருக்கும் போது, அவர்கள் இறந்ததாக எப்படி நீங்கள் அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்த வாக்காளர் திருத்தப் பட்டியலில் நடக்கும் குளறுபடிகள் சம்பந்தமான வழக்கில் தாமே நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார் மம்தா. 

Advertisment

இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உச்சநீதிமன்றம், எஸ்ஐஆர் பணிகளை முறையாக விரைந்து முடிக்க அறிவுறுத்தியது. இவ்வாறு மாநில அரசிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையே தொடர்ந்து முரண்கள் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, "இவர்கள் இருவருக்கிடையே உள்ள முரண்களைத் தீர்க்கவும், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவும் எஸ்ஐஆா் பணியில் சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமர்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பின்னர், உச்சநீதிமன்றத்திற்குப் பதிலளித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், ‘எஸ்ஐஆா் பணியில் 250 நீதிபதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை குறித்த கோரிக்கைகள், ஆட்சேபனைகள் தொடர்பாக 50 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளில் ஒரு நீதிபதி 250 விண்ணப்பங்கள் குறித்து முடிவு எடுத்தாலும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்யக் குறைந்தபட்சம் 80 நாள்களாகும்’ என்று தெரிவித்திருந்தது.   

இந்த கருத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், "மேற்கு வங்க எஸ்ஐஆா் பணியில் ஏற்கெனவே பணியமர்த்தப்பட்ட நீதிபதிகளுடன், கூடுதலாக உரிமையியல் நீதிபதிகளையும் பணியமர்த்தலாம். அவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால் போதும். ஒருவேளை, இந்த நீதிபதிகளும் போதவில்லை என்றால், மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியை அணுகி, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை மேற்கு வங்க எஸ்ஐஆா் பணிக்கு அனுப்புமாறு கோரலாம். இந்தக் கோரிக்கையை ஜாா்க்கண்ட், ஒடிஸா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் அவசரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.   

Advertisment

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலைப் பிப்ரவரி 28 தேதி வெளியிட இருப்பதாகத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது போன்ற திருத்தப்பணிகள் நிறைவடையக் காலதாமதமாகும். எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், அதன் பின்னர் இந்த திருத்தப்பணிகள் நிறைவடைந்து துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்களும், இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதாகவே கருதப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.