சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தெடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடற்கரையில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி. ஜெகதீஷ் சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கடற்கரையை ஆய்வு செய்வதாகத் தெரிவித்திருந்தனர். 

Advertisment

அதன்படி நீதிபதிகள் மெரினா கடற்கரையை ஆய்வு செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி (02.01.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “உலகிலேயே 2வது நீளமான கடற்கரை மெரினா கடற்கரை ஆகும். இந்த கடற்கரையின் ஒரு பகுதிக்கு நீலக்கொடி சான்று வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு நீலக்கொடி சான்று வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தலைவர்களின் நினைவிடங்களுக்கு பின்புறம் உள்ள பகுதிகளையும் நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிக்க வேண்டும். எனவே நீலக்கொடி பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் யாரும், எந்த விதமான கடைகளையும் அமைக்கக்கூடாது. 

Advertisment

உழைப்பாளர் சிலைக்குப் பின்னால் ஏராளமான நிரந்தரக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் உணவுப்பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் போன்ற கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளை அகற்ற வேண்டும். உலகில் எந்த ஒரு கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. இது போன்ற ஏராளமான கடைகளால் கடற்கரையின் அழகை ரசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கடற்கரை என்பது ரசிப்பதற்குத் தான். அது ஷாப்பிங் மால் அல்ல. மெரினா கடற்கரையில் தற்போது 1417 கடைகள் உள்ளன. இந்தத் திட்டத்தினை மறு ஆய்வு செய்து முறையான நடவடிக்கையின் மூலம் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும். 

hc

பொதுமக்கள் கடற்கரையை ரசிப்பதற்கு, கடைகள் இடையூறாக இல்லை என்பதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு (08.01.2026) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதன்படி இந்த வழக்கு அன்றைய தினம் (08.01.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “மெரினா கடற்கரையில் உள்ள 1417 கடைகளின் எண்ணிக்கையை 300ஆகக் குறைக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடப்படுகிறது. அதாவது ஏற்கனவே உள்ள உணவு, பொம்மைகள் மற்றும் பேன்சி கடைகள் மட்டுமே கடற்கரையில் இருக்க அனுமதிக்க வேண்டும். மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது. அங்குள்ள கடைகளை முறைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா கடற்கரையில் 300 கடைகள் அமைக்க குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.  இதற்காக நாளை (12.02.2026) சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமார் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெற உள்ளது.