திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில், மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இதில் மூர்த்தி, அவரது மூத்த மகன் தங்கபாண்டியன் மற்றும் இளைய மகன் மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் கடந்த 5ஆம் தேதி (05.08.2025) இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தங்கபாண்டியனும் மணிகண்டனும் சேர்ந்து தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தகவலையடுத்து உடனே அங்கு சென்ற சண்முகவேல், தந்தை - மகன் சண்டையைப் பிரித்து சமாதனம் செய்திருக்கிறார். அதே சமயம் போலீசார் வந்ததைப் பார்த்த மணிகண்டன், தோட்டத்தில் சென்று பதுங்கிக் கொண்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்.ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.
அதேசமயம் மணிகண்டன் போலீசாரல் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். அப்போது சம்பவம் நடைபெற்ற குடிமங்கலம் சிக்கனூர் அருகே உள்ள உப்பாறு என்ற பகுதியில் மணிகண்டன் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்குச் சென்று அவரை கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது எஸ்.ஐ. சரவணகுமார் என்பவரை மணிகண்டன் அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது எடுத்த புகைப்படம் தான் அவரது கொலைக்கான காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன்களான மணிகண்டன் தங்கபாண்டி ஆகிய இருவர் மீதும் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 4 காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் இவர்கள் இருவர் மீதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் சண்முகவேல் காலை காவல் நிலையத்திற்கு வந்துவிடுங்கள் எனத் தெரிவித்து இருவரையும் புகைப்படம் எடுத்து உடனடியாக காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஏற்கனவே கொலை கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தநிலையில் தலைமறைவாக உள்ள சமயத்தில் இது போன்று புகைப்படம் எடுத்ததால் தங்களது அடையாளம் வெளிப்பட்டுவிடும். உடனடியாக கைது செய்யப்பட்டு விடுவோம் என அச்சமடைந்துள்ளனர். மேலும் மணிகண்டன் சண்முக வேலுவிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டாம். எங்களுடைய வீட்டுப் பிரச்சனை எனத் தெரிவித்துள்ளார். அச்சமயத்தில் உதவி ஆய்வாளர் சண்முகவேல் இது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மறைத்து வைத்திரந்த அரிவாளால் சண்முக வேலை தாக்கி கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.