மீன்பிடி தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீண்ட நாட்களாகவே மீன்பிடி தடை காலம் அமலில் இருந்த நிலையில் மீனவர்கள் மீதான இலங்கையின் கைது நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது. மீன்பிடி தடைகாலம் முடிந்து தற்போது தமிழக மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலை 3 மணி அளவில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருக்கையில் மன்னார் வடக்கு கடற்பரப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு என்பவருடைய விசைப்படகை சிறைபிடித்து அதிலிருந்த எட்டு மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் எட்டு பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.