தென்காசி மாவட்டத்தின் சாம்பவர் வடகரைப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தன்னுடைய ஐந்து கறவை மாடுகளுடன், பெருமாள் என்பவரின் 2 மாடுகளையும் சேர்த்து அங்குள்ள பொட்டல் களம் பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றிருக்கிறார். மேய்ச்சலுக்குப் பின் அந்த 7 மாடுகளும் அங்குள்ள குளத்துப் பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, அதில் அறுந்து கிடந்த மின்வயர் மூலம் பாய்ந்த மின்சாரம் 7 மாடுகளையும் தாக்கியதில், அவைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகியிருக்கின்றன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்து தன் மாடுகளின் நிலையைக் கண்டு கதறிய மாரியப்பன், சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்.ஐ. கார்த்திக் வருவாய் ஆய்வாளர் சங்கரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரின் பேரில் கால்நடை மருத்துவர்களான சசிகுமார், அசன்காசிம், சாமிநாதன் ஆகியோர் மாடுகளைப் பரிசோதனை செய்தனர். பலியான மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும். ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தப் பகுதியில் வயர்மேன் இல்லாததே சம்பவத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார்கள் அப்பகுதியின் பொதுமக்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில்பதற்றமாகியிருக்கிறது.
Follow Us