ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகர், லட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் நள்ளிரவில் முகமூடி அணிந்து கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் ரயில் நகர் கணபதிநகரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 62), லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த நவநீத் (34), ஜீவா நகரை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி கண்ணம்மாள் (56) ஆகியோர் வீடுகளில் மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டினர்.
Advertisment
இந்த 3 வீடுகளில் மொத்தம் 12¾ பவுன் நகை திருட்டு போனது. மேலும் முகமூடி கொள்ளையர்கள் குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Advertisment
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளி தெற்கு பெங்களூரு கர்வேபாவிபாளையா பகுதியை சேர்ந்த ரவியின் மகன் தர்ஷன் (21) என்பதும், முகமூடி கொள்ளையர்களில் இவரும் ஒருவர் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட தர்ஷனிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் தாவனகரே துர்காம்பிகா படவானே நிட்டுவள்ளி பகுதியைச் சேர்ந்த பாபுவிஷன் என்பவரின் மகன் வென்சன் (20), அதே பகுதியை சேர்ந்த பீமா நாய்க் என்பவரின் மகன் சந்துரு (25) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தர்ஷன், வென்சன், சந்துரு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது. இதில் தர்ஷன், சந்துரு ஆகியோர் மீது பெங்களூருவில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.முகமூடி கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா பாராட்டினார். ஈரோட்டில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Advertisment