Senthil Balaji answered Nainar Nagendran speaks in a half-hearted manner
தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட ‘தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம்’ யாத்திரையின் நிறைவு விழா புதுக்கோட்டையில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமித்ஷா பங்கேற்றார்.
அதில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். அங்கு 41 பேர் உயிரிழந்தனர். உடனடியாக இரவோடு இரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். 41 பேருக்கு உடனடியாக் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. கரூர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காக உடனடியாக செய்யப்படுகிறது. அந்த சாவுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்” என்று குற்றம் சாட்டினார்.
நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில் பாலாஜி, “கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை போய் கொண்டிருக்கிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அந்த இடத்திற்கு விஜய் தாமதாக வந்தார் என்று சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார். அவர் ஏன் விளக்கை அணைத்தார்? காவல்துறை சொன்ன இடத்தில் ஏன் வாகனத்தை நிறுத்தாமல் மாற்று பாதையில் போனார்? இதையெல்லாம் பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசியலுக்காகவும், அரசின் மீது தனிப்பட்ட முறையில் காழ்புணர்ச்சிக்காவும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனபான்மையோடும் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
ஒரு கட்சியின் தலைவராக அரைகுறைத்தனமாக என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளாமல் குறுகிய மனப்பான்மையோடு சொல்லப்பட்ட கருத்துக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இங்கு இருக்கிற மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். அரசு எந்த அளவுக்கு செயல்பட்டது, முதல்வர் இரவோடு இரவாக வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நின்றார் என்பது மக்களுக்கு தெரியும்” என்று கூறினார்.
Follow Us