பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், “என் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என தெரிவித்திருந்தார்.
மற்றொருபுறம் அன்புமணி ராமதாஸ் 100 நாட்களுக்கு உரிமை மீட்டு பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு 10 விதமான உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும் என்கிற பிரச்சார பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே ராமதாஸ் கடந்த 2ஆம் தேதி (02.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறானா?. இருக்கிறது. அதுவும் என்னை வேவு பார்த்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்டம் இளையனூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை வரவழைத்து புகார் கொடுத்தேன். அதே போன்று சைபர் கிரைம் என்ற துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறேன்.
அந்த சிப் அண்ட் மோடம் அதை எல்லாம் கூட காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். ஒரு பக்கம் சைபர் கிரைம் காவல்துறை, இன்னொன்று நானே ஒரு ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி அவர்கள் இது எப்படி எங்கிருந்து யாரால் இயக்கப்படுகிறது என்று அதையும் ஆய்வு செய்திருக்கிறோம். அவர்களும் விரைவில் அது சம்பந்தமாக எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். இது பிரைவேட் ஏஜென்சி என்பது காவல் துறைக்கும் சைபர் கிரைமுக்கும் உதவுவதற்காகத் தான் அது உதவியாக இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது” எனப் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும், ராமதாஸ் பயன்படுத்தும் செல்போன் உரையாடல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு முன்வைத்தது. கடந்த 3 ஆண்டுகளாகவே ராமதாஸை தொலைபேசி வாயிலாக அழைப்பவர்கள் மற்றும் நேரில் சந்திப்போர்களின் உரையாடல்கள் ஓட்டு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமதாஸின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் சார்பாக அவரின் தனிச் செயலாளரும், பா.ம.க.வின் செய்தி தொடர்பாளருமான சுவாமி நாதன் சார்பில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், “ராமதாஸ் இல்லமான தைலாபுரம் தோட்டத்தில் சுமார் 2 வருடங்களுக்கு முன் சசிகுமார் என்பவர் மூலம் வைபை இனைப்பு, சென்னையைச் சேர்ந்த நிறுவனம் மூலம் சிசிடிவி கேமரா வைத்துள்ளனர். இதனையடுத்து ராமதாஸ் இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் வெளியில் உள்ள நபர்களுக்குச் சென்றடைவதை சந்தேகத்தின் பெயரில் தனியார் நிறுவனம் மூலம் ஆராய்ச்சி செய்ததில் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் ராமதாஸ் தொலைப்பேசி அழைப்புகள் (Port Forwarding method) மாற்றம் செய்து பின் சென்னையில் உள்ள நபர்களுக்குச் செய்திகள் வந்தடைந்ததை உறுதி செய்தோம். எனவே ரமாதாஸ் இல்லத்தில் சட்ட விரோத செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.