பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, பசும்பொன் அருகே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர்  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினர்.  இதையடுத்து பசும்பொன்னுக்கு சென்ற மூவரும் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மூன்று பேரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக  மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisment

இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இது ஏற்கெனவே போட்ட திட்டம் தானே. அதிமுகவில் இருந்தபோதே குழி பறித்த காரணத்தினால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்ததால் தான் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இவர்களெல்லாம் திமுகவின் பி டீமாக இருந்து செயல்படுகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரைக்கும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பற்றி பேசுவதே வீண், கால நேரம் தான் வீணாக போகிறது” என்று கூறினார்.

இந்த நிலையில், பசும்பொன்னில் தனியாகச் சென்ற செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள், கட்சியில் இருந்து நீக்கினால் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பொறுத்திருந்து பார்த்ததற்கு பிறகு தான் என்னுடைய பதில் கிடைக்கும். நீக்கினால் சந்தோஷப்படுவேன்” என்று கூறிச் சென்றார்.

Advertisment