Sengottaiyan Update on the change of the date of the TVK Erode meeting
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில், ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
அதனால், இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு கடந்த 7ஆம் தேதி அளித்திருந்தார். அந்த மனுவில், ஈரோட்டில் உள்ள பவளத்தாம்பாளையம் அருகே விஜய் பரப்புரை செய்ய உள்ளதாக த.வெ.க.வினர் குறிப்பிட்டு அனுமதி கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், ஈரோட்டில் 16ஆம் தேதி நடக்கவிருந்த கட்சி கூட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், “தவெக தலைவர் விஜய் வருகைக்கு 84 விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மழை வெயில் வந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இது இதுவரையிலும் இல்லாத ஒன்று. இது போன்ற விதிகள் கூடுதலாக இருப்பதால், அதை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறேன். டிசம்பர் 18ஆம் தேதி கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்கு அனுமதி வழங்குவார்கள் என்று நம்புகிறோம். அனுமதி வழங்கவில்லை என்றால் வழக்கு மன்றத்திற்கு செல்வோம்.
சில விதிமுறைகள் இருக்கிறது. அதைப் பற்றி வெளியே சொல்ல முடியாது. ஏனென்றால், அதற்காக கூட வழக்கு போட முடியும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, சிபிஐ இருக்கிறது என்று வழக்கு போடுவார்கள். அதனால் நாம் பேச முடியவில்லை. சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன், வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்” என்று கூறினார்.
Follow Us