முத்துராமலிங்க தேவரின் 63வது குருபூஜை நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன்னில் (30.10.2025) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தை தெரிவித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் பங்கேற்று கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதோடு மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதனால், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்குவதாகக் கூறி அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலேயே அவருடைய சட்டமன்றக் குழுவில் எம்.எல்.ஏவாகவும், ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுகவில் பல முக்கிய பதவிகளில் வகித்து வந்த செங்கோட்டையனை, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்திள் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று (03.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இப்போது வருகிற பிரச்சனைகள் ஒன்றின் ஒன்றாகப் பார்க்கின்ற போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் அல்ல. இன்று இவருடைய (மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியைக் குறிப்பிட்டார்) அரசியலிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.
ஆகவே ஒருவருடைய வாழ்க்கையை பொறுத்தவரையிலும் அரசியலில் பொறுத்தவரையிலும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறினாலும் கூட இந்த இயக்கத்திற்காக (அதிமுக) எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து, ஜெயலலிதா காலம் வரையிலும், இன்று வரையிலும் இந்த இயக்கம் ((அதிமுக) வலிவு பெற வேண்டும், இந்த இயக்கம் (அதிமுக) நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவரையும் ஏமாற்றக் கூடாது என்பதுதான் தத்துவம்” எனப் பேசினார்
Follow Us