சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நேற்று (04.02.2026) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக அதிமுகவை ஊழல் கட்சி என்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர் பொதுவெளியில் வந்து பார்த்தால் தான் தெரியும். பொதுவெளியிலே வரவில்லை. கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களாக ஒரு கட்சி தலைவர் வெளியே வரவில்லை.
நாட்டில் என்ன நடக்குது என்று அவருக்கு தெரியவில்லை. எந்தெந்த கட்சி எந்தெந்த கட்சியுடன் கூட்டணி இருக்கிறது என்று தெரியவில்லை. எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. அவருக்கு ஒன்னுமே தெரியாத போது எங்களிடம் கேட்டால் எப்படி? அவரிடம் போய் கேள்வி கேளுங்கள். ஏற்கெனவே அதிமுக கூட்டணி அமைக்கின்ற போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நானும் என்னுடைய மூத்த நிர்வாகிகள் எல்லாம் கலந்து கொண்டோம். அமித்ஷா அளித்த முதல் பேட்டியிலேயே அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டும் இணைந்து புதிய கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும், எங்களுடைய கூட்டணியின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுப்படுத்திவிட்டார்.
இதை அவர் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை, பார்ப்பதற்கு நேரமில்லை. மக்களையும் பார்ப்பதில்லை, தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளவும் இல்லை. ஒரு கட்சியினுடைய தலைவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். தெரியாமல் அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார். நாட்டில் நடக்கிற நிலவரம் என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. இப்படி ஒரு தடவையாவது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச சொல்லுங்கள். எங்களை எல்லாம் ஊழல் சொல்வதற்கு வழியே கிடையாது. ஜெயலலிதாவை அவர் ஏற்றுக்கொள்கிறார், ஜெயலலிதா தான் ரோல் மாடல் என்கிறார். யாரை (செங்கோட்டையன்) கூட வைத்திருக்கிறார். அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும்தான் இது போன்ற கருத்துக்களை பலர் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால் நேரடியாக திமுகவிடத்திலே (எதிர்த்து) பேச வேண்டும். பி டீமாக யார் செயல்படுகிறார் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை பற்றி எல்லாம் அவருக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை
எந்த கருத்தை அவர் வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் தோல் பயம் என்பது அவருக்கு ஏற்பட்ட காரணத்தின் அடிப்படையிலேதான் இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இது தவிர இன்று பார்க்கின்ற போது தெரியும் ஒவ்வொரு நாளும் ஒரு தேர்தல் அறிக்கை கொடுக்கிறார். தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு நாளும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுக்கிறார் என்று சொன்னாலே எவ்வளவு தோல்வி பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Follow Us