Advertisment

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி

Untitled-1

அண்மைக் காலமாகவே அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை நாம் அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று வெளியே சென்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் சென்று, இதுகுறித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமானவரிடம் வலியுறுத்தினோம். ஆனால், பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கவில்லை.

Advertisment


வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ‘எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டுமே அவர்கள் கூறுகிறார்கள். யார் யாரை இணைக்கலாம் என்பதை கட்சியின் பொதுச்செயலாளரே முடிவு செய்யலாம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும்.

Advertisment

விரைவாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும். ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புகின்றனர். நான் விடுக்கும் கோரிக்கையை ஏற்றால், பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்து உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” எனத் தெரிவித்திருந்தார். இது அதிமுக கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செங்கோட்டையனின் கருத்து தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி, திண்டுக்கலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், திண்டுக்கலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு  வந்தார். 

இந்நிலையில், அதிமுக பொறுப்புகளில் இருந்து கே.ஏ. செங்கோட்டையனை நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் அமைப்பு செயலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை விடுவித்து, எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இருப்பினும், செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

admk edappadi k palaniswami k.a.sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe