வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி தங்களது செல்வாக்கை காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதியின் தவெக செயல்வீரர்கள் பொதுக்கூட்டம் இன்று (22-02-26) நடைபெற்றது. ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். அன்றைய நிலைகள் வேறு இன்றைய நிலைகள் வேறு என்பதை நான் அறிவேன். கூட்டத்தை கூட்டுவார்கள், பணத்தை கொடுப்பார்கள், பாதியிலே எழுந்து செல்வார்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இன்று வரையும் காத்துக் கொண்டிருக்கிற கூட்டம் எங்கே இருக்கிறது என்றால் புரட்சி தலைவருடைய போர்படை தலைவர்களாக இருக்கிற நீங்கள் தான் என்பதை நான் அறிவேன். இரண்டு நாட்களுக்கு முன்னால், மதுரையில் நடைபெற்றக் கூட்டம் எவ்வளவு செலவாக இருக்கிறது என்றால், 15 கோடி ரூபாய்.. ஆனால் ஒரு ரூபாய் கூட இல்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால், நம்மை தவிர எந்த இயக்கத்திற்கும் இல்லை என்ற வரலாற்றில் அவர் படைக்கப்பட்டிருக்கிறார்.
நான் எம்.ஜி.ஆரோடு பயணத்தை மேற்கொண்டவன். 1972ல் இயக்கத்தை துவங்குகிற போது 77ல் சட்டமன்ற உறுப்பினராக 26 வயதில் தேர்தல் களத்தில் நின்றவன். எம்.ஜி.ஆரையும் பார்த்தேன், ஜெயலலிதாவையும் பார்த்தேன். அவர்களுக்கு பிறகு அந்த காலம் விரைவில் வரப்போகிறது என்பதை என்னால் உணர முடிகிறது. ஜனநாயகத்தை முடித்தாலும், முடக்கப்பட்டாலும் ஜனநாயகத்தை காக்கின்ற ஒரே குரல் நம்முடைய விஜய்யின் குரல் என்பதை நாட்டு மக்கள் உணர்வதற்கு காலம் விரைவில் இருக்கிறது. விஜய்யை, தமிழ்நாட்டில் முதலமைச்சராக உருவாக்கி காட்டுவோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழ்நாட்டை ஆளுகின்ற ஒரே சக்தி நம்முடைய விஜய்க்கு மட்டும் தான் இருக்கிறது. வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நம்முடைய விஜய் தான் வெற்றி பெறுவார்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/22/sengo-2026-02-22-18-23-22.jpg)