தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் இனைந்தது. முன்னதாக திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. 

Advertisment

அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர், திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

manickam-tagore-mp-ani-mic
கோப்புப்படம்

இதற்கிடையே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “திமுக கூட்டணிக் கட்சிகளில் சீட்டு எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறதே?” எனக் கேள்வி எழுப்பினார். 

Advertisment

அதற்கு செல்வபெருந்தகை, “இது குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் தலைமை இதனை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே வலிமையாக உள்ள கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேருகிறார்கள் என்றால் இன்னும் வலிமை பெறும். வலிமை பெறுவதற்கான சூழல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இனிமேல் முரண்பாடான கருத்துகள் எல்லாம் சொல்ல மாட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.