Sellur Raju criticized DMK
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (14-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி 10 தேர்தல் அறிக்கையை கொடுத்தார். அது இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு பெருகிவிட்டது. இது முதலமைச்சரை 10 நாட்களாக தூங்கவிடவில்லை. தூங்காமல் இருந்து மகளிருக்கு 2000 சேர்த்து 5,000 உரிமைத் தொகையாக கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொடுத்த 10 தேர்தல் அறிக்கையால் திமுக கூட்டணி எல்லாம் ஆட்டம் கண்டுவிட்டது. தேர்தல் பயத்தில் இந்த ரூ.5,000 அறிவித்திருக்கிறார். இந்த ரூ.5,000 பயனளிக்காது. மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். திமுக தங்க கட்டியாக கொடுத்தால் கூட மக்கள் பயனளிக்காது.
கோடை சிறப்பு தொகை என்று சொல்கிறார். ஜோக் ஜோக்காக சொல்கிறார். யாரோ ஒருவர் சொன்ன கான்செப்டை முதல்வர் அறிவித்து இன்றைக்கு நகைச்சுவை மாதிரி ஆகிவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்தி இருக்கலாம், போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கலாம். சட்ட ஒழுங்கை காப்பாற்றி இருக்கலாம், எல்லாவற்றையும் விட்டுவிட்டு இன்றைக்கு இதை செய்தால் மக்கள் என்ன நினைப்பார்கள். என்னதான் தங்க கட்டியாக கொடுத்தால் கூட திமுகவை இனி ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர், நம்பியாரை புரட்டி எடுப்பார். அது போல் எடப்பாடி பழனிசாமி திமுகவை புரட்டி எடுக்கிறார். இந்த தேர்தல் நம்பியாருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடக்கும் சண்டை” என்று கூறினார்.
Follow Us