வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் ஒவ்வொரு கட்சிகளும் மாநாடு, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி தங்களது செல்வாக்கை காட்டி வருகின்றன.
அந்த வகையில் திருச்சி ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்டம மாநாடு இன்று (21-02-26) நடைபெற்றது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 பெண் வேட்பாளர்கள் உட்பட 234 234 வேட்பாளர்களை அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் பேசிய சீமான், “நாங்கள் உங்களிடமிருந்தே உங்களுக்காக வந்தவர்கள், எங்களின் அடுத்த அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்காக வந்தவர்கள். இதுவரை இந்த நிலத்தில் இருக்கின்ற அரசியலில் இருந்து முற்று முழுதாக மாறுபட்டது
எங்களின் அரசியல். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசை தீர்மானிப்பது, அரசியல். எமக்கான மூச்சு காற்றை நாங்களே சுவாசிப்பது போல, எமக்கான உணவை நாங்களே எடுத்து உண்பது போல, எமது உரிமையை எமது விடுதலையை, நாங்களே போராடி பெறுவது என்ற உயர்ந்த நோக்கோடு களத்திற்கு வந்த பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள். எங்களுடைய கனவு ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல, ஆட்சி முறை மாற்றம். அதனால்தான் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் எங்கள் இலக்கு என்ற முழக்கத்தை முன்வைத்து களத்தில் நிற்கிறோம். கட்டிய கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல, அந்த கட்டடத்தையே இடித்துவிட்டு புத்தம் புதிதாக புதிய ஒரு கட்டடத்தை கட்ட வந்த புரட்சியவாதிகள் நாங்கள். இங்கே அரசியல் என்பது கட்சி அரசியல். தேர்தல் அரசியலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது, மக்களுக்கான அரசியல் இல்லை. இங்கே செய்தி அரசியல், விளம்பர அரசியல் இருக்கிறது. சேவை அரசியல், செயல் அரசியல் இல்லை. எங்களின் கனவு, எங்களின் இலக்கு எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே.. பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு தீண்டாமை, அடக்குமுறை ஒடுக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வளக்கொள்ளை, மது, மத போதை இது ஏதுமற்ற புதிய ஒரு தேசம் செய்வோம். மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் என்ற பெருங்கனவோடு களத்திற்கு வந்த பிள்ளை.
2016லே வெறும் நான்கரை லட்சம் வாக்குகள் 1.1 விழுக்காடு தான். மற்ற கட்சிகள் எல்லாம் இருந்த இடம் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் கொண்ட உறுதி, லட்சிய, சுமை தொடர்ந்து தொடர்ந்து தனித்து நின்று எவரோடும் சமரசம் இல்லை. நின்ற எல்லா தேர்தலிலும் தோற்றோம். இங்கே யாருக்காவது தோற்றவர்கள் போல் தெரிகிறதா? இல்லை. ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி, எந்த சமரசம் செய்து சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாது தனித்து நின்று தேர்தல் களத்தில் நிற்கிறது என்றால் அது இந்திய துணை கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும் தான். இங்கே கூட்டணி என்பது வெறும் சீட்டணி, நோட்டணியாக மாறி இருக்கிறது. நாங்கள் வியாபாரம் செய்ய தயாராக இல்லை, அந்த பாவத்தையும் செய்ய தயாராக இல்லை.நாங்கள் செய்ய வந்தது வியாபாரம் அல்ல, எங்களுக்கு வேண்டியது அரசியல் விடுதலை. அதற்காகவே தனித்து களத்திலே நிற்கிறோம். நாட்டில் தமிழ் இல்லை, ஏட்டில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, ஆட்சியில் இல்லை, பேச்சு மொழியாக இல்லை, வழிபாட்டு மொழியாக இல்லை, பயன்பாட்டு மொழியாக பண்பாட்டு மொழியாக எந்த இடத்திலும் என் தாய் மொழி இல்லை. இது ரசிகர் கூட்டம் அல்ல, லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா? இன எழுச்சியா?... பணமா ? தமிழன் என்கிற மானமிக்க இனமா? இது தான் இந்த களத்தில் இருக்கிறது. நாம் இவர்களை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. தான் வீழ்ந்தாலும் சரி, என் இனம் எழுந்தால் போதும்.. தான் செத்தாலும் சரி, என் இனம் வாழ்ந்தால் போதும் என்று நின்ற ஒப்பற்ற பெருமறவன் நம்முடைய தலைவன் மேதகு பிரபாகரன் அவன் மொழியே கீதை, அவன் வழியே பாதை என்ற முடிவோடு களத்திலே வந்தோம்” என்று ஆவேசமாகப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/21/seemanntk-2026-02-21-21-53-25.jpg)