Seeman questioned Why did the DMK, which opposes the SIR, announce the consultation number?
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக 17ஆம் தேதி போராட்டம் வைத்திருக்கிறேன். பூத் லெவல் அதிகாரிகளை நியமிப்பது யார்? திமுக அரசு தான் பிடிக்கவில்லை வேண்டாம் என்று சொல்கிறீர்களே எதற்காக நியமித்தார்கள்? தேர்தல் அறிவித்த பிறகு தான் ஆட்சி, நிர்வாகம் அனைத்து கட்டுபாடுகளும் தேர்தல் ஆணையத்துக்கு போகும். இப்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? பிஎல்ஓ அதிகாரிகளை நியமித்தது யார்? நீங்களா? தேர்தல் ஆணையமா?.
அரசு தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறதே? எதற்காக ஆலோசனை பெற உதவி எண்ணை அறிவித்தார்கள்?. அப்போது எதிர்க்கிறீர்களா? ஏற்கிறீர்களா?. எத்தனை நூற்றாண்டுக்கு இந்த நாடகத்தை ஆடுவீர்கள்?. அன்றைக்கு வாக்காளர் ஆட்சியாளர்களை தீர்மானித்தார்கள். இன்று ஆட்சியாளர்கள், வாக்காளர்களை தீர்மானிக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
Follow Us