Secondary school teachers are fighting even on New Year's Day
கடந்த 2009 ம் ஆண்டு மே 31 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.8370 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 1 முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.5200 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரண்டு நியமனத்திற்கும் இடையில் அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் 3170 ஆக இருந்தது. அந்த வித்தியாசம் தற்போது 16000 ரூபாய் வரை மாறியுள்ளது. இரண்டு நியமனங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் வேலை மற்றும் தகுதி போன்றவை ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில், ஊதியத்தில் மட்டும் எதற்காக இந்த வித்தியாசம் என ஏற்கனவே பல குரல்கள் எழுந்துள்ளன.
இந்த வேறுபாட்டை களைய கடந்த அதிமுக ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என உறுதியளித்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த 2022 ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
இன்று வரை அந்த குழு அறிக்கையை சமர்பிக்காததையடுத்து, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 1 வார காலமாக மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராடி வரும் ஆசிரியர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்றும் (01-01-26) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, இன்று நள்ளிரவு 12 மணி முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாண வேடிக்கைகளுடன் கேக் வெட்டி கோலாகலமாக்க கொண்டாடி வருகின்றனர். உலகமே புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் சூழ்நிலையில், இன்றும் தங்களுடைய உரிமைக்காக சென்னையில் 7வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Follow Us