தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் தான் திமுக இதுவரை தங்களை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார்.
அதோடு திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என தெரிவித்திருந்த அவர், ''கூட்டணி பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தோம். அதன் பிறகு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதிச் செய்ய கோரி இருந்தோம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. ஆனால் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் எனத் தெரியவில்லை. திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாக காத்திருக்கிறோம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கிரிஷ் ஜோடங்கர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் டெல்லி செல்லும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி, நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.யை இன்று (28.01.2026) சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில், ராகுல்காந்தியுடன் கனிமொழி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/28/rahul-kanimozhi-2026-01-28-15-51-09.jpg)
அதன் ஒருபகுதியாக வரும் சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு 30 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் வழங்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இம்முறை கூடுதல் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Follow Us