கடலூர் மாவட்டம், புவனகிரி நகரத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மாணவ மாணவிகள் 1200க்கும் மேற்பட்ட கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பொருபாண்மையாக கூலி  மற்றும் விவசாய பணிகளை செய்பவராக உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தமிழக அரசு, மாணவர்களுக்கு பள்ளி செல்வதற்கு பேருந்தில் கட்டணம் வசூலிப்பது இல்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பல நேரங்களில் காத்திருந்து அரசு பேருந்துகளில் சென்று கல்வி பயின்று வருகிறார்கள். இதனால் பள்ளி நேரத்தின் போது அரசு நகர பேருந்துகள் கூட்டமாக இருக்கும். இதனால் மாணவர்கள், இந்த பேருந்தை விட்டால் அடுத்த பேருந்து வருவதற்கு அதிக நேரம் ஆகும் என கூட்ட நெரிசலில் ஏறி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதில் சில மாணவர்கள் பேருந்துகளின் பின்னால் தொங்கியவாறு செல்கின்றனர். உயிரை பணயம் வைத்து செல்கிறார்கள். இதை பார்க்கும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Advertisment

இந்நிலையில், நேற்று (17-11-25) மாலை புவனகிரியில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு பேருந்தில் சில மாணவர்கள் பேருந்தின் பின்னால் தொங்குவதை பார்த்து சாலையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அறிந்து பேருந்து நடத்துநர், கீழே இறங்க அறிவுறுத்தினாலும் அவர்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே காலை மற்றும் மாலை பள்ளி நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கினால் மாணவர்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாமல் செல்ல நேரிடும் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.