திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் முகிலன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் முகிலனின் தந்தையை அழைத்து உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விடுதியில் இருக்கும் முகிலன் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை. அதே சமயம் எதற்குப் பள்ளிக்கு வராமல் இருக்கிறார் என அதிர்ந்த பெற்றோர் இது குறித்து திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2  நாட்களாக மாயமான மாணவன் முகிலனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று  (03.08.2025) காலை முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டு அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து  போலீசார் மற்றும் பெற்றோர் அங்கு விரைந்து சென்று முகிலனின் சடலத்தை மீட்டனர்.
Advertisment
மர்மமான முறையில் இறந்த முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பத்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாணவனின் உயிரிழப்பு குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவன் முகிலனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,   அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisment
பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவன் முகிலன் கடந்த சில நாள்களுக்கு முன் காணாமல் போன நிலையில்,  அது குறித்து விசாரணை நடத்தி வந்த காவலர்கள், பள்ளி வளாகத்தில்  உள்ள  கிணற்றில் இருந்து மாணவரின் உடலை மீட்டுள்ளனர். முகிலனை இழந்த பெற்றோர் துயரத்தில் வாடும் நிலையில்,  அவர்களின் துயரத்தை மேலும் அதிகமாக்கும் வகையில்  மாணவன் முகிலன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பது கண்டிக்கத்தக்கவை.

a4640
'School students mysteriously; high-level investigation needed' - Anbumani insists Photograph: (pmk)

மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின்  முகப்பு இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது.  அதைத் தாண்டி கிணற்றுக்குள் குதிப்பதோ, தவறி விழுவதோ  சாத்தியமில்லை.  அவ்வாறு இருக்கும் போது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று திட்டமிட்டு  செய்திகள் பரப்பப்படுவதன் பின்னணியில் யாரையோ காப்பாற்றும் எண்ணம் இருப்பது உறுதியாகிறது.  மாணவனின் மர்ம மரணத்தில் தொடர்புடைய எவரையும் காப்பாற்ற முயற்சிக்கக் கூடாது.
அண்மைக்காலங்களாகவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது  அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தான்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின்  சொந்தத்  தொகுதியில் அமைந்துள்ள  திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த  யுவராஜ் என்ற 12-ஆம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே பள்ளியில் ஜூன் மாதம் திருவள்ளூரைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி மர்மமாக உயிரிழந்திருந்தார். அரசு பள்ளிகளில் இப்படியாக மர்ம மரணங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும்.
திருப்பத்தூர் பள்ளி மாணவன் யுவராஜ் மட்டுமின்றி, மற்ற பள்ளிகளிலும் கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த மாணவர்களின் மர்ம மரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு  அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் மாணவர் முகிலனின்  குடும்பத்திற்கு  ரூ.50 லட்சம் இழப்பீடு  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.