திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் முகிலன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் முகிலனின் தந்தையை அழைத்து உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து விடுதியில் இருக்கும் முகிலன் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை. அதே சமயம் எதற்குப் பள்ளிக்கு வராமல் இருக்கிறார் என அதிர்ந்த பெற்றோர் இது குறித்துத் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2  நாட்களாக மாயமான மாணவன் முகிலனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (03.08.2025) காலை முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டு அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து  போலீசார் மற்றும் பெற்றோர் அங்கு விரைந்து சென்று முகிலனின் சடலத்தை மீட்டனர்.

மர்மமான முறையில் இறந்த முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
a4640
School student lose their live; Police say cause Photograph: (thirupathur)

இந்நிலையில் மாணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர்களிடம் உடலை வாங்கிக் கொள்ளும்படி போலீசார் தரப்பில் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் உடன் பயிலும் நண்பர்கள் சரியாக பேசாத காரணத்தினால் முகிலன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவலை காவல்துறையினர் உறவினர்களிடம் தெரிவித்தனர்.இதைக் கேட்டவுடன் ஆத்திரமடைந்த உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று 'காவல்துறை எங்களுக்கு எதிராக செயல்படுகிறது. தனியார் பள்ளியை காப்பாற்றுவதற்காக தவறான தகவல்களை எங்களிடம் கொடுக்கிறார்கள்' என போலீசார் மீது குற்றம்சாட்டி, திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Advertisment

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் குண்டு கட்டாக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.