தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதன்படி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

இந்த நிலையில், நாளை நல்ல தகவலை தெரிவிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை (24-02-26) கொண்டாடப்பட உள்ள நிலையில் சசிகலா இன்று மாலை அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுடைய தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் நானும் பயணிக்கிறேன். நாளைக்கு பசும்பொன்னில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதில் சில முடிவுகளை எடுக்கிறோம். அதற்கு முன் எங்கள் தலைவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி வேண்டிவிட்டு புறப்படுகிறேன். எங்கள் தலைவர்கள் இன்னும் நம் மக்களுக்காக எல்லோர் மனதிலும் இருக்கிறார்கள். நாளைக்கு ஒரு நல்ல தகவலை சொல்கிறேன்” என்று கூறிச் சென்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் சசிகலா புதிய கட்சி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Advertisment