Sasikala announces new party Photograph: (politics)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் கமுதியில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அவரது உரையில், ''எம்ஜிஆர் அண்ணா இருக்கும்போதே சட்டமன்றத் தேர்தலில் நின்று எம்எல்ஏவாக இருக்கிறார். அண்ணா இறந்த சமயம் கலைஞரே இருக்கட்டும் அவருக்கு எல்லாருடைய சப்போர்ட்டும் தேவை என்று எம்ஜிஆரே எல்லாரிடமும் பேசினார்.
எம்ஜிஆர்தான் கலைஞரை முதலமைச்சராக கொண்டுவந்தார். கலைஞருக்கு முதலமைச்சர் சீட்டு கிடைத்துவிட்டது. அதற்கு பிறகு வழக்கம் போல கலைஞர் வேலையை கட்டிவிட்டார். கலைஞர் என்னை நீக்கிவிட்டார். நீங்கள் எல்லாம் ஒரு முடிவு செய்து நல்லபடியாக செயல்படுங்கள் என்று தனது ஆதரவாளர்களிடம் எம்ஜிஆர் சொன்னார். அன்னைக்கு திமுகவில் இருக்கின்ற தொண்டர்களும் யார் என்று பார்த்தால் எம்ஜிஆருடைய மன்றத்து ஆட்கள் தான். அதுதான் திமுக. மற்றவர்கள் யாரும் கேட்கவில்லை. நீங்கள் வந்தாக வேண்டும். நீங்கள் ஒரு கட்சி துவங்கிய நடத்தி ஆக வேண்டும் என்றார்கள். ஆனால் எம்ஜிஆருக்கு அந்த மாதிரி ஒரு எண்ணமே இல்லை. எம்ஜிஆர் கையில் கட்சியோ இல்லை. அனகாபுத்தூர் ராமலிங்கம் என்று ஒருவர் இருந்தார். அவர்தான் எம்ஜிஆர் மீது பாசம் உள்ளவர். அவர் ஒரு கட்சியை ரெஜிஸ்டர் பண்ணி வைத்திருந்தார். அவர் எம்ஜிஆர் இடம் அதை கொடுத்து நீங்கள் இந்த கட்சியை எடுத்து நடத்துங்கள் என்கிறார். அந்த கட்சி எம்ஜிஆர் ஆரம்பித்தது அல்ல, அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் ஆரம்பித்த கட்சி தான் அதிமுக.
அதற்குப் பிறகு எம்ஜிஆர் எடுத்து அதை நடத்தினார். முதலில் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மாயத்தேவரை நிறுத்தி முதல் முறை வெற்றி பெற்றார். அப்பொழுது இரட்டை இலை சின்னம், சுயேட்சை சின்னமாக இருந்தது. அதையடுத்து பல தேர்தல்களில் நின்று வெற்றி பெற்றார். முதல் வெற்றி அதுதான். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் எல்லாவற்றிலும் நின்று வெற்றி பெற்று மூன்று முறை எம்ஜிஆர் தமிழகத்தை ஆண்டார். அதில் ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தார். அப்பொழுதெல்லாம் ஜெயலலிதாவை அரசியலுக்கு எம்ஜிஆர் கொண்டு வந்து விட்டார். ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். 'எம்ஜிஆர் உயிரோடு வருவார் உங்களை எல்லாம் பார்ப்பார் நான் சொல்வதை நம்பி ஓட்டு போடுங்க' என்று ஜெயலலிதா ஓட்டு கேட்டார். ஏன் ஜெயலலிதா அந்த வார்த்தையை சொன்னார்கள் என்றால் கலைஞர் ஒரு பக்கம் 'எம்ஜிஆர் இறந்து விட்டார் அவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள்' என்று பொய் சொல்லி கலைஞர் ஒருபக்கம் திசை திருப்பினார். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. நல்லபடியாக தலைவர் வெற்றி பெற்று வந்து பதவி ஏற்று கொண்டார். இதுதான் அதிமுகவின் வரலாறு'' என்றார்.
தொடர்ந்து அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், புதிய கட்சி பெயரை விரைவில் அறிவிப்பேன் என சசிகலா அறிவித்துள்ளார்.
Follow Us