பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

Advertisment

இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அதன் பின்னர் விடுவித்தனர். 

Advertisment

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும், பணியைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிர்புறம் சாலையில் இன்று (12.12.2025) திடீரென  சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து தலைமைச் செயலகத்திற்கு முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.