police Photograph: (chennai)
தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாயிலில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 148 ஆவது நாளாக இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று பேரணி நடத்த திட்டமிட்டு அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட குழுக்களாக கூடினர். பேரணியாக சென்று முதல்வரிடம் தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என கோரிக்கை வைக்கும் மனுவை அளிக்க திட்டமிட்டிருந்தனர். தூய்மைப் பணியாளர்களின் இந்த பேரணி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பிராட்வே பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பேரணி செல்ல போலீசார் அனுமதி அளிக்கத்தால் ஒன்று கூடிய தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே போலீசார் கொண்டு வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Follow Us