மணல் குவாரி மோதல் வழக்கில் இருந்து அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 27 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆவினன்குடி என்ற இடத்தில் மணல் திரட்டுக்கு எதிராகக் கடந்த 2015ஆம் ஆண்டு இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், அப்போதைய குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சிவசங்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் இன்று (13.10.2025) காலை கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் . அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் சிவசங்கர் உட்பட 27 பேரையும் விடுவித்துத் தீர்ப்பளித்தார்.