'Same welcome...' - Former student surprised by her return to her school as collector Photograph: (ERODE)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான சென்னியப்பன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை வான்மதி படித்தார். அந்த சமயத்தில் பள்ளி விழாவில் அப்போது கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
அன்று கலெக்டர் உதய சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என ஆர்வம் கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்திருந்தநிலையில் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது, தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவ,மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.
Follow Us