மோதல்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு இந்து மதம் தேவை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பவகத் தெரிவித்துள்ளார்.

தர்ம ஜாக்ரன் நியாஸின் புதிய கட்டிட திறப்பு விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மோதல்கள் நிறைந்த இன்றைய உலகிற்கு இந்து மதம் தேவை. ஏனென்றால் இந்து மதம் ஒரு உலகளாவிய மதம். இது பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது எவ்வாறு நிர்வகிப்பது என்று கற்பிக்கிறது. இன்று முழு உலகிற்கும் இந்த தர்மம் தேவை. உலகம் அதன் பன்முகத்தன்மையை நிர்வகித்துக்கொண்டு எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. அதனால் தான் பல மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியர்களைப் பொறுத்தவரை தர்மம் என்பது உண்மை. இந்த மதம் ஒற்றுமையையும், அனைத்து பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ள கற்பிக்கிறது. நாங்கள் அனைத்து பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதால் நாங்கள் வேறுபாடில்லாமல் இருக்கிறோம். இதை தான் இந்த மதம் நமக்கு கற்பிக்கிறது.

இது ஒரு உலகளாவிய மதம். ஆனால், இதை இந்துக்கள் முதலில் கண்டுபிடித்ததால் இது இந்து தர்மம் என்று அழைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்து மதம் இயற்கையின் மதம், ஒரு உலகளாவிய நம்பிக்கை, மனிதகுலத்தின் மதம். ஒவ்வொரு இதயமும் இந்த மதத்தால் விழித்தெழுந்திருக்க வேண்டும். ஒரு மதத்தின் கடமை, கடவுளுக்கு மட்டும் இருக்கக் கூடாது சமூகத்திற்காகவும் இருக்க வேண்டும். தர்மத்திற்காக பல தியாகங்களை செய்யப்பட்டதை இந்திய வரலாறு காட்டுகிறது. தர்மத்திற்காக தலைகள் வெட்டப்பட்டன, ஆனால் யாரும் தர்மத்தை விட்டு வெளியேறவில்லை. நீங்கள் சாவா படத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்த தியாகங்கள் அனைத்தும் நமக்காக செய்யப்பட்டவை. அவர்கள் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நமது தர்மம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. வித்தியாசமாகத் தெரிந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதே உலகின் இறுதி உண்மை என்று அனைவரும் நம்பினர். இதனால் சாதாரண மக்களும் இத்தகைய தியாகங்களைச் செய்தனர். வெவ்வேறு நம்பிக்கைகளின் பாதைகள் ஒரே இடத்தை நோக்கிச் தான் செல்கின்றன என் இந்து மதம் கற்பிக்கிறது. எனவே, யாரும் மற்றவர்களின் பாதைகளை வலுக்கட்டாயமாக மாற்ற முயற்சிக்கக்கூடாது” என்று கூறினார்.