Rowdy arrested in shooting - excitement in Cuddalore Photograph: (police)
கடலூரில் ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் இவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் ரமேஷை ஒருவர் கத்தியால் வெட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தினார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பிரபல ரவுடியான நெய்வேலி இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுபாஸ்கர் என்பது தெரியவந்தது. பின்னர் இவரை நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனையொட்டி வெள்ளிக்கிழமை நெய்வேலி தெர்மல் பகுதியில் சுபாஸ்கர் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று காவலர்கள் வெங்கடாசலம், வைத்தியநாதன் ஆகிய இருவரும் சுபாஸ்கரை காவல்துறையினரிடம் சரண்டாக வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு சுபாஸ்கர் காவல் துறையினரிடம் தப்பிப்பதற்காக கத்தியால் இருவரையும் கையில் வெட்டியுள்ளார். உடனே ஆய்வாளர் விஜயகுமார் சுபாஸ்கர் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.
இதில் காயமடைந்த அவர் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயம் அடைந்த காவலர்கள் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரபல ரவுடியான சுபாஸ்கர் மீது ஊமங்கலம், நெய்வேலி, டவுன்ஷிப் உள்ளிட்ட காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளது என்றும் இவருக்கும் ரமேஷுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
Follow Us