கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisment

அந்த வகையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா அமர்வு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standing Operation Procedure) 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தான் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று (21.11.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி. ரவீந்திரன் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதற்கு மனுதார் தரப்பில் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வாதிடப்பட்டது. 

Advertisment

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜே. ரவீந்திரன், “ஏதேனும் ஒரு நிபந்தனைக்கு அவர்கள் ஆட்சேபனைத் தெரிவிக்கத் தொடங்குவார்கள். இந்த நிலை தொடரும். எனவே இந்த வாதம்  முடிவடையாது. அதாவது வழிமுறைகள் இறுதி செய்வது ஒருபோதும் முடிவடையாது” எனத் தெரிவித்தார். அதே சமயம் ஆனால் த.வெ.க உள்ளிட்ட கட்சியினர், “வழிகாட்டு நெறிமுறைகளை எங்களுக்குத் தெரிய வேண்டும். அது தொடர்பாக நாங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “த.வெ.க உட்பட பல்வேறு கட்சிகள் அளித்த பரிந்துரைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவு உருவாக்கப்பட்டது. 

சுமார் 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும், 42 பதிவு செய்யப்பட்ட கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அவர்கள் வழக்கு தொடரலாம்” எனத்  தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மனுதாரர்கள் தரப்புக்கு மட்டும் அந்த நகல்களைக் கொடுக்க உத்தரவிடப்படுகிறது. அதோடு இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 27ஆம் தேதிக்கு (27.11.2025) ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் வாதம் பிரதிவாதம் குறித்து முடிவெடுத்துச் செய்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisment