தலித் சமூக பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து ஆணவக் கொலை செய்துவிட்டார்கள் என 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து 2 மாவட்டத்தில் போராட்டம் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அழகப்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகள் தேவஜெயஸ்ரீ பிரியா (22) இவர் இளங்கலை பயின்று சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிரியாவுக்கு இளம் வயதிலேயே அப்பாவும், அம்மாவும் இறந்துவிட்டனர்.
ஆதரவு இல்லாத தருணத்தில் அவரது பாட்டி துணையோடு சுயமாக கிடைக்கு வேலையை செய்துக்கொண்டு கல்வி பயின்று வந்துள்ளார் பிரியா. இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே மேல்பாதி சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகன் மகன் வசந்தராஜ் இவர் கல்லூரி காலங்களில் ஏற்பட்ட பழக்கத்தால் காதலித்து வந்துள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரியாவை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
ஒரு மாதம் சந்தோஷமாக சொந்த ஊரில் இருந்த இவர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு பிரியாவிடம் கணவரின் தந்தை, தாய், கணவர் உங்க வீட்டில் விசேஷம் வைக்க சொல்லு என வலியுறுத்தி வரதட்சணை கேட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருப்பதாக பிரியா அவரது அத்தையிடம் கூறியுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/04/848-2026-02-04-14-29-26.jpg)
இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது உடலை கடலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விட்டு சம்பந்தப்பட்ட முருகன் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளது.
விவரம் அறிந்த பிரியா குடும்பத்தினர் கடலூர் மருத்துவமனை முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை சாதி பெயரை கூறி வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அறிவித்து வரும் 6-ந் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் பழ.வாஞ்சிநாதனிடம் பேசுகையில் பிரியாவை கணவரின் பெற்றோர் மற்றும் சகோதரர் வரதட்சணை கேட்டும் சாதி பெயரை கூறியும் திட்டி உள்ளனர். கடந்த 30ஆம் தேதி பிரியா தமிழ்நாடு அவசர அழைப்பு 100 எண்ணிற்கு போன் செய்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வசந்தராஜ் குடும்பத்தினர் மீண்டும் அவரை சாதி பெயரைக் கூறி இழிவு படுத்தி தாக்கியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அம்மா வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர் இது திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தில் ஆணவக் கொலை என்று வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
மக்கள் அதிகார மாவட்ட செயலாளர் பாலு கூறுகையில், 'தலித் அல்லாத மாற்று சமூக பெண்ணை தலித் இனத்தவர் திருமணம் செய்தால் நாடகக் காதல் என ஒரு கூட்டம் கூறுகிறது. தற்போது தலித் பெண்ணை காதலிக்கிறேன் என ஏமாற்றி மூன்று மாதத்திற்குள் அவரை தற்கொலைக்கு தூண்டி ஆணவக்கொலை செய்த சம்பவத்திற்கு என்ன காதல் என்று இவர்கள் கூறுவார்கள். எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் தமிழக அளவில் போராட்டத்தை முன்னெடுபோம்'' என்றார்.
சம்பவம் குறித்து முருகன் குடும்பத்தினர் தெரிவிக்கையில், 'எங்களுக்கு இதில் இஷ்டம் இல்லை. எங்க பிள்ளைக்கு பிடித்திருக்கிறது என்று அமைதியாக இருந்தோம். ஒரு மாதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தான் இருந்தார்கள். கணவன் மனைவிக்கு சிறு சிறு சண்டை வந்துள்ளது. இதனால் இந்த பெண் இதுபோன்று செய்துகொண்டது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறுகின்றனர்.
இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சரியான நடவடிக்கை எடுப்பார்களா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/04/849-2026-02-04-14-29-04.jpg)