திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோர் இறந்துவிட்டதால், தனது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். சிறுமியின் பெரியப்பாவின் மகளை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவருடைய வீட்டுக்கு அந்தச் சிறுமியை அனுப்பி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதற்குச் சேர்த்துள்ளனர். அதன்படி, சிறுமி தன் அக்கா வீட்டில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், சம்பவ நாளன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, சாமுவேல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், சாமுவேலின் தொந்தரவு காரணமாக அங்கு இருக்கப் பிடிக்காமல், சிறுமி மற்றொரு ஊருக்கு உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, அவர் ஒரு தனியார் காப்பகத்தில் தங்கிப் படித்தார். அந்தக் காப்பகத்துக்கு சாமுவேல் சென்று அந்தச் சிறுமியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், அவருடன் செல்ல மறுத்த சிறுமி, நடந்த சம்பவத்தைப் பற்றி தனது உறவினரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியை அவரது உறவினர் மாவட்டக் குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், சிகிச்சைக்காகச் சேர்த்தபோது, சிறுமி மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சாமுவேல் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர். பின்னர், அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.பள்ளிச் சிறுமியைக் கற்பமாக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.