வேலூர் அடுத்த பொய்கை ஊராட்சியில் உள்ள வார சந்தை ஆண்டு ஏலம் இன்று (18-02-26) அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு கோடிக்கு சந்தை ஏலம் போகும் நிலையில், ஏல தொகையின் குறிப்பிட்ட தொகையில் இருந்து ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒதுக்க வேண்டிய ஒரு பங்கு நிதி சுமார் 90 லட்சத்தை கடந்த 3 ஆண்டுகளாக அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஒதுக்கவில்லை.

Advertisment

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை அதிகாரிகளை சந்தித்து கேட்டபோதும் நிதியை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்கள் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. வாரவாரம் சந்தை முடிந்ததும் அதனை சுத்தம் செய்வதே பெரும் சிரமத்துக்கு ஆளாகிறது. நிதியிருந்தால் கூடுதல் பணியாளர்களை வைத்து சுகாதாரமாக கிராமத்தை வைத்திருக்க முடியும், அதோடு பொய்கை சந்தையில் மக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, சிசிடிவி கேமிரா உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் இதுவரை செய்து கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதன்பின் பொது மக்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இடையே நடத்திய பேச்சுவார்த்தையில் 15 லட்சம் நிதியை விடுவிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஏலம் துவங்கி நடைபெற்றது. இந்த ஏலத்தில் பலர் கலந்துக்கொண்டனர். இந்த ஆண்டும் லோகநாதன் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக லோகநாதனே ஏலம் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் சிண்டிகேட் அமைக்கப்பட்டு குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்படுகிறது என்கிறார்கள். இந்தாண்டு ஜிஎஸ்டியோடு சேர்த்து 1 கோடியே 42 லட்சத்து 24 ஆயிரத்துக்கு பொய்கை சந்தை ஏலம் முடிந்தது. கடந்த ஆண்டு ஜிஎஸ்டியோடு சேர்த்து 1 கோடியே 24 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.