Reels lovers' brutality shocking in Chennai Photograph: (chennai)
காதல் மனைவி மற்றும் மனைவியின் தோழியால் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பகீரை கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (22 வயது) .சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அம்மன் நகர் நான்காவது குறுக்குத்தெரு பகுதியில் வசித்து கான்கிரீட் ஜல்லி போடும் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாத செல்வகுமாருக்கு ஏற்கனவே திருமணமான ரஜிதா என்ற பெண்ணின் நட்பு மூலமாக பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ரீனா என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் நாட்டம் கொண்ட செல்வகுமார் ரீனாவை முதுகில் சுமந்து கொண்டு பாடலுக்கு ரீல்ஸ் போடும் அளவிற்கு பழகி வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து ரீனா, தனியாக வீடு ஒன்றை எடுத்து தங்கியிருந்த நிலையில் செல்வக்குமாருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக திருமணம் செய்துகொள்ளாமலே ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
அதேநேரம் ரீனாவை அறிமுகப்படுத்திய ரஜிதாவுக்கும் செல்வகுமாருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ரஜிதா உடனான செல்வகுமாரின் இந்த ரகசிய காதல் ரீனாவுக்கு தெரியவந்துள்ளது. நம் இருவருக்கும் செல்வகுமார் துரோகம் செய்துவிட்டதாக ரீனாவும், ரஜிதாவும் வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் சோகத்தில் மூழ்கிய செல்வகுமார், ரீனாவின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு காதல் சோக கீதங்களை ரீல்ஸாக வெளியிட்டு வந்துள்ளார்.
அதேநேரம் தன்னை பிரிந்து சென்ற ரீனாவின் மீது இருந்த கோபத்தில் ஆபாசமாக பேசியதோடு ரீனா மற்றும் ரஜிதாவின் புதிய காதலர்களையும் செல்வகுமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரீனாவும் ரஜிதாவும் சமரசம் பேச பழைய பல்லாவரம் சுபம் நகர்ப் பகுதிக்கு செல்வகுமாரை வரவழைத்திருக்கிறார்கள். அப்போது ரீனாவும், ரஜிதாவும் செல்வகுமாரிடம் ஆவேசமாக பேச, செல்வகுமாரும் ஆவேசமாக பேசியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ரீனா மற்றும் ரஜிதாவின் நான்கு புதிய நண்பர்கள் செல்வகுமாரை சூழ்ந்து கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் செல்வகுமாரின் முகம் சிதைக்கப்பட்டதோடு அவருடைய அந்தரங்க உறுப்பும் அறுத்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பலனின்றி செல்வகுமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ரீனா, ரஜிதா, 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய அலெக்ஸ் என்ற நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Follow Us