பவானிசாகருக்கு குறைந்தது நீர்வரத்து

a70

Reduced water flow to Bhavanisagar Photograph: (erode)

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த நான்கு முன்பு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டதால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று (30/07/2025) காலை அணைக்கு 3,674 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100.4 அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 3600 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 20.23 அடியாக உள்ளது. இதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 22.18 அடியாக சரிந்து உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 14.20 அடியாக சரிந்து உள்ளது. ஒருபுறம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் மறுபுறம் மற்ற அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் வேதனை அடைந்துள்ளனர்.

Bhavani Sagar Erode water weather
இதையும் படியுங்கள்
Subscribe