ration Shop workers struggle in chidambaram
நியாயவிலை கடை பணியாளர்களின் போராட்டத்தால் நியாய விலை கடைகள் மூடப்பட்டு பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
சிதம்பரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும், தாயுமானவர் திட்டத்திற்கு உள்ள பிரச்சனைகளை களையப்பட வேண்டும், ஓய்வு பெற்ற நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி வரவேற்றார், நிர்வாகிகள் சிவராமன், மணிவண்ணன், குபேர், அறவாழி முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் துரை.சேகர் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார்.
இந்த போராட்டத்தால் சிதம்பரம் வட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளும் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். அதேபோல் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயச்சந்திர ராஜா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
Follow Us