தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

Advertisment

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்திம், பறிமுதல் படகுகளை விடுவிக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (11.08.2025) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 55 நாட்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.