தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 விசைப் படகுகளையும், அதில் இருந்த 30 மீனவர்களையும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (09.10.2025) சிறை பிடித்தனர். அதோடு மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (11.10.2025) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக 800க்கு மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். அதோடு நாள் ஒன்றுக்கு அரசுக்கு 10 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த ராமேஸ்வர மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதோடு இலங்கை வசம் உள்ள அனைத்து விசைப்படகுகளையும், இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ பெண்கள், மீனவர் சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.