தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இத்தகைய இக்கட்டான சூழலில் தான் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (12.11.2025) இரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. அதோடு கனமழையும் பெய்தது. இதன் காரணமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. அதில் ஒரு விசைப்படகு துறைமுகத்தில் மோதி முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் ஒரு விசைப்படகின் நங்கூரம் அறுந்து தரைதட்டியது.
இதனால் ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். அதே சமயம் தரை தட்டிய விசைப்படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு இல்லாத காரணத்தினால் தான் புயல் மற்றும் மழைக் காலங்களில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைகின்றன. எனவே இதனைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இயற்கை சீற்றத்தாலும் விசைப் படகுகள் சேதமடைந்ததால் ராமேஸ்வர மீனவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
Follow Us