Advertisment

“நான் காட்டிய வழியில் வாருங்கள், உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்” - ராமதாஸ்

3

பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர, நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். மறுபுறம், அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ஆம் தேதி (09.08.2025) நடைபெற்றது. இதில் பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில்,  இன்று விழுப்புரம் பட்டானூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்துகொண்டுள்ளார். மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில்பா.ம.க. விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisment

அதிலும் முக்கியமாக, ‘சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. ராமதாஸைத் தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அனைத்துத் தேர்தல்களிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது. பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் எனத் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம். பா.ம.க. அமைப்பு ரீதியாக 35-ஆவது விதியைத் தொடங்கி தீர்மானம் நிறைவேற்றம். வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்றப்பட்டும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு, பா.ம.க. நிறுவனர் தலைமையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். தமிழக அரசு தட்டிக்கழிக்காமல் உடனடியாக ஜாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பொதுக்குழுவில் பா.ம.க.வில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, 16 குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இதில் பேசிய ராமதாஸ், “இங்கு நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்கள் இரு சாதிகளுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களுக்குமானவை. தமிழ்நாட்டில் இருக்கும் 324 சமூகங்களுக்காக நான் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறேன். பாடுபடுகிறேன், பாடுபடப்போகிறேன். எல்லாப் பிரச்சினைகளுக்கும் நான் குரல் கொடுத்திருக்கிறேன். அதிமுக நமக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்தது. எனது நண்பர் கலைஞர் நமக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தார். அதில் நம்முடன் சேர்த்து 115 சாதிகள் பயன்பெறுகின்றன. ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது சேர்ந்து உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அவர்களுக்காகவே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். ஆகவே, தமிழகத்தில் இருக்கும் அனைத்துச் சமூகங்களும் என் பின்னால் வாருங்கள்.

இவ்வளவு கூட்டத்தை நான் பா.ம.க.வில் இதுவரை பார்த்ததில்லை. இது பணம் கொடுத்து கூட்டப்பட்ட கூட்டமல்ல. உங்களின் நம்பிக்கை வீண்போகாது. உங்களைக் கேட்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். நீங்கள் (தொண்டர்கள்) கொடுத்த அதிகாரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவேன். பா.ம.க. தொண்டர்கள் விரும்பும் வகையில் நல்ல கூட்டணி அமையும். நான் காட்டிய வழியில் வாருங்கள், உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்” என்றார். 

anbumani pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe