பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
தற்போது தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அன்புமணி தரப்பு பாமக, அதிமுக- பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேநேரம் ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே யார் உண்மையான பாமக, யாருக்கு மாம்பழம் சின்னம் என்ற போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக ராமதாஸ் தரப்பு பாமகவின் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரிப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் பாமகவினுடைய அதிகாரப்பூர்வ தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணியின் முகவரிக்கு தேர்தல் ஆணையத்தின் கடிதங்கள் வந்திருந்தன. இதற்கு ராம்தாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த முறை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் வாதங்கள் அடிப்படையிலே அன்புமணி தலைவர் அல்ல ராமதாஸ் தான் தலைவர் என்கின்ற ஒரு கருத்தை ராமதாஸ் தரப்பினர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில்தான் இன்று இந்த வழக்கில் முக்கியமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணையம் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு தாக்கல் செய்தது. தங்களிடம் இருக்கக்கூடிய ஆவணத்தின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தலைவராக உள்ளார். அதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் ராமதாஸ் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று வர வேண்டும். அவ்வாறு பெற்று வந்தால், ராமதாஸ் தான், தலைவர் என்பதாக, சிவில் நீதிமன்றம் கூறினால் மட்டும்தான், எங்களால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியும். அதுவரை அன்புமணி தான் பாமகவின் தலைவராக இருப்பார் என்று குறிப்பிட்டு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதனை ஏற்க மறுத்த ராமதாஸ் தரப்பினுடைய வழக்கறிஞர் தங்களுடைய ஆட்சேபனைகளை உத்தரவில் பதிவு செய்ய வேண்டும் என்று முறையிட்டார். அதனடிப்படையிலே ராமதாஸ் தரப்பினுடைய ஆட்சேபனை வாதங்களில் பதிவு செய்யப்பட்டது. அன்புமணி தலைவர் இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றால் ராமதாஸ் தரப்பினர் சென்னையில் சிவில் நீதிமன்றத்தை நாடி ஒப்புக்கொண்டால் மட்டும் தான் திருத்தத்தையும் செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/a3290-2026-02-09-16-41-43.jpg)