Rajnath Singh refuses to sign documents on Shanghai Cooperation Organisation
கடந்த 2001ஆம் ஆண்டில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் முயற்சியால் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (எஸ்சிஓ) என்ற கூட்டமைப்பு உருவானது. இந்த கூட்டமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்தன. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு கடந்த ஜூன் 25ஆம் தேதி சீனாவில் தொடங்கியது. இந்த கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
2 நாள்கள் நடைபெற்ற கூட்டமைப்பில் முடிவெடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலை குறித்தும் எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறி அந்த அறிக்கையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடு இந்தியா மீது தொடர்ந்து எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஏவி வருகிறது. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை குழுவின் மற்ற உறுப்பு நாடுகள் கண்டிக்க வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன.
பயங்கரவாதம் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டிற்கு எப்போதும் இடமில்லை. 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு, இது போன்ற செயல்களில் ஈடுபடும் நாடுகளை விமர்சிக்க தயக்கம் காட்டக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. அமைதியும் செழிப்பும் உள்ள நாடு, பயங்கரவாதத்துடன் இணைந்து வாழ முடியாது. பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கையில் கையெழுத்திடாததால், எஸ்சிஓ கூட்டமைப்பு மாநாடு கூட்டறிக்கையின்றி நிறைவடைந்தது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவு ஆவணத்தில் கையெழுத்திடாத பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் முடிவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆதரித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “எஸ்சிஓ அமைப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அந்த அமைப்பின் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் சென்ற போது முடிவு ஆவணம் குறித்து விவாதம் நடந்தது. அப்போது ராஜ்நாத் சிங் நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நாடு என்று மட்டும் குறிப்பிட்டு பேசினார். அந்த ஒரு நாடு எது என்பது நீங்கள் யூகிக்க முடியும். அதை பற்றி நாங்கள் குறிப்பிட விரும்பவில்லை. ராஜ்நாத் சிங்கின் கருத்து சரியாகவே இருந்தது. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதே அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும் போது அதைப் பற்றிய குறிப்பை அறிக்கையில் அனுமதிக்கவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அவர் கூறினார். எஸ்சிஓ அமைப்பு ஒருமனதாக இயங்குகிறது. அறிக்கையில் பயங்கரவாதத்தை குறிப்பிடுவதற்கு ஒரு நாடு உடன்படவில்லை. அறிக்கையில் பயங்கரவாதம் என்று குறிப்பிடவில்லை என்றால் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என ராஜ்நாத் சிங் தெளிவாகக் கூறிவிட்டார்” என்று கூறினார்.